திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.44 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.
1
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.
2
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.
3
கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.
4
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.
5
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.
6
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.
7
தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.
8
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஓப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
9
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
10
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைல்லார்க் கில்லையாம் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.50 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
குன்ற வார்சிலை நாண ராவரி
    வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
    தென்ற லார்மணி மாட மாளிகை
சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
    அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.
1
பரவி வானவர் தான வர்பல
    ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
    கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
சந்து காரகில் தந்து (*)பம்பைநீர்
    அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.

(*) பம்பை என்பது ஒரு நதி.
2
நீண்ட வார்சடை தாழ நேரிழை
    பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
    பூண்ட கேழல்ம ருப்பரா விரி
கொன்றை வாள்வரி யாமை பூணென
    ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.
3
சேலின் நேரன கண்ணி வெண்ணகை
    மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
    பாலின் நேர்மொழி மங்கை மார்நட
மாடி யின்னிசை பாட நீள்பதி
    ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
4
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
    தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
    வண்ட லார்கழ னிக்க லந்தும
லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
    அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.
5
ஓதி யாரண மாய நுண்பொருள்
    அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
    சோதியே சுடரே சுரும் பமர்
கொன்றை யாய்திரு நின்றி யூருறை
    ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
6
மங்கை வாணுதன் மான்ம னத்திடை
    வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
    பங்க யமது வுண்டு வண்டிசை
பாட மாமயி லாட விண்முழ
    வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
7
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
    யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வெண்டர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
    குன்றெ டுத்தநி சாசரன் திரள்
தோளி ருபது தான் நெரிதர
    அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
8
செய்ய தாமரை மேலி ருந்தவ
    னோடு மாலடி தேடி நீள்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
    தைய லாளொடு பிச்சைக் கிச்சை
தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
    டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
9
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
    நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
    முத்தை வென்ற முறுவ லாளுமை
பங்க னென்றிமை யோர் பரவிடும்
    அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
10
வாடல் வெண்டலை மாலை யார்த்தும்
    யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
    கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
    பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
11
ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் என்பது ஆமாத்தூர் என மருவி நின்றதென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com